“நரேனையும் உன்னையும் இன்னைக்கு மீட் பண்ண வைக்கணும்றது எங்களோட ப்ளான் வேணி. ஆனா ப்ரவியும் நானும் வீடு வந்து சேர நினச்சதவிட லேட்டாகிட்டு, அதான் கருண கூட சீக்கிரமா அனுப்பி வச்சோம். ஸ்டில் கொஞ்சம் சொதப்பிட்டு போல” என பவி துவங்கவுமே முழு விஷயமும் சில சில புள்ளிகளாய் வேணிக்குப் புரிய ஆரம்பித்து விட்டதுதான்.
அடிவயிற்றில் அடக்க மாட்டாமல் ஒரு திகீர் மற்றும் என்னவெல்லாமோ!
“ஒரு தடவை தப்பு செய்துட்டோம்ன்றதால வாழ்க்கை நின்னு போய்டுறது இல்ல வேணி, கடந்த காலத்தில் நாம கத்துகிட்ட பாடத்தை வச்சு எதிர்காலத்த நல்லா அமைச்சுக்கத்தான் பார்க்கணுமே தவிர, இப்படி கடைசி வரைக்கும் தனியா நிப்பேன்னா எப்படி? உன்னை சரியா புரிஞ்சி, உன் கூட வாழ்றதுக்குன்னு கல்யாணம்ன்ற உறவில் ஒருத்தங்க வர்றப்ப நீ அந்த வாழ்க்கைய ஏன் வேண்டாம்னு சொல்லணும்?
சரியா சொல்லப் போனா உன்னை மேரேஜ் செய்றவங்கதான் உனக்காக கடவுள் கொடுத்த உன்னோடவங்க. உன்னோடது இல்லாத ஒன்னை ஆசைபட்டு அடிவாங்கிட்டன்றதுக்காக, உன்னோடவங்கள வேண்டாம்னு சொன்னா எப்படி சரி?” என்றெல்லாம் பவி ஏற்கனவே பேசி, யோசிக்கவிட்டு இவளை மனதளவில் திருமணத்துக்கு தயார் செய்து வைத்திருக்கிறாள்தான்.
இவளுக்கு 7 வருடங்கள் முந்தைய ரோஹன் காரியங்கள் என்றோ எங்கோ நடந்தது போல் ஞாபகத்தில் இருக்கின்றனவே தவிர பச்சை ரணமாய் இல்லை. அந்நாளைய அருவருப்பு, பயம், அவமானம் குற்ற உணர்வு, தவிப்பு, திக்கற்ற உணர்வு என்பவை எல்லாம் இப்போது, நான் அப்படி உணர்ந்தேன் என்ற ஒரு செய்தியாகத்தான் அறிவில் இருக்கிறதே தவிர, மனதில் உணர்வாய் அமர்ந்து பிசைந்து கொண்டும் இல்லை.
கடவுளும் காலமும் சேரும் போது காயமாறிப் போயிருப்பது இயல்பல்லவா?
அதனால் திருமண ஏற்பாட்டுக்கு சம்மதிக்கவும் முடிந்திருந்தது.
ஆக இந்த வருடத்தில் இவளுக்கு திருமணத்திற்கு வரன் பார்க்கத் துவங்குவதாகவுமே பவி தெரிவித்திருந்தாள். ஆனால் அது இப்படியாய், அதுவும் நரேனாய் இருக்கும் என்பது இவள் சற்றும் கற்பனை செய்யாத விஷயம்.
சிந்திக்க துவங்கிய இரு நொடிகளுக்கெல்லாம் நரேன் என்ற பதம் நிச்சயமாய் ஒரு பயமற்ற உணர்வை தருகிறதுதான். அவளது கடந்த காலத்தை கண்டிப்பாக அவனால் சரியாக கையாளத் தெரியும் என்ற அனுபவம் தரும் தைரியம் அது. எப்பவுமே அவன் அதை குறையாக சொன்னதே இல்லையே!
அதே போல் நிச்சயமாக அவனது கடந்த காலத்தை இவள் வலிக்கும் படி தொடவே மாட்டாள். நாளைப் பின் அவனது பழைய வாழ்வினால் எதாவது பிரச்சனை வந்தால் கூட, அவனுக்கு துணையாக நிற்கத்தான் மனம் போகுமே தவிர, தாழ்வாக பார்க்க வராது, என இவள் மனதையும் இவளுக்கு அனுபவமாகவே தெரியும். அந்த விஷயத்தில் இவள் எப்படி என அவனுக்கும் தெரிந்திருக்கும். ஆக அவனிடம் இவள் பாதுகாப்பாக உணர்வது போல் இவளிடமும் அவன் உணர முடியும் என்பதும் புரிகிறது.
மனம் இங்கெல்லாம் ஓட இவள் எதுவும் சொல்லாமல் பவியின் முகத்தைப் பார்த்தாள்.
நரேன் சிறையிலிருந்து வெளி வரவும் அவனுக்கு தொழில் துவங்க முதலீடு தந்தது மீரட்தான். வங்கியிலிருந்து தொழிற் கடன் வாங்கும் தகுதி நரேன்க்கு இல்லை என்பதால் மொத்த தொகையுமே மீரட் தான் கொடுத்திருந்தான்.
முதலீடு முழுவதுமே மீரட்டுடையதாய் இருந்தும் ‘மெசின் டிசைனிங் எனக்கு கொஞ்சமும் தெரியாத பிஸினஸ், புதுசா நான் அதை இப்ப கத்துகிட்டு செய்ற அளவு சூழலும் இல்ல, அதனால நான் பார்ட்னரா வரலை” என்றும் மறுத்துவிட்டான் மீரட். ஆக தன் தொழிலில், பணவிஷயத்தில் மீரட்டிடமிருந்து எந்த தலையீடும், நிர்பந்தமும் இல்லையென்ற நிலை நரேனுக்கு.
இருந்தும் மாதம் மாதம் தன் லாபத்தில் திட்டமிட்டு சேமித்து, இரண்டே வருடத்தில், மீரட் தரப்பில் பணத்தைப் பற்றி ஒரு வார்த்தை பேசும் முன்னும் கூட, மீரட்டின் கடனை அடைத்துவிட்டான் நரேன்.
அதோடு தொழில் என ஒன்று தொடங்கிவிட்டாலும், முறையான படிப்பில்லாத நிலையும், சிறையிலிருந்த பின்புலமும் இருக்க, நரேனோடு நம்பி தொழில் செய்ய யார் வருவார்? ஆக ப்ரவி அவனுக்கு அறிமுகமானவர்களிடமெல்லாம் நரேனை பரிந்துரை (ரெஃபரன்ஸ்) செய்தான்.
நரேனாக அறிந்து வரும் தொழில் வர்த்தகர்களிடம் கூட ப்ரவி நரேனுக்கு பரிந்துரை வழங்கினான். ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியின் பரிந்துரை இருக்கும் போது யார் நரேனின் பின்புலத்தை துருவப் போகிறார்கள்?
அப்படி ப்ரவி அறிமுகப்படுத்திய எல்லோருமே இன்றுவரை நரேனை நம்பகத்தன்மைக்கு ப்ரவியிடம் பாராட்டிதான் பேசி இருக்கிறார்களே தவிர, யாரும் குறை சொல்லும்படி நரேன் நடந்து கொண்டதே இல்லை.
இதையெல்லாம் இப்போது வேணியிடம் குறிப்பிட்ட பவி, “அவன் பண விஷயம், மனுஷங்கள மனுப்ளேட் செய்றதுன்னு எல்லாத்திலும் மாறிட்டான்னு உனக்கு புரியுதுதானே” என விளக்கி
“அதனால நம்பிக்கையா அவன உனக்கு என்னாலயும், ப்ரவியாலயும் சஜஸ்ட் செய்ய முடியும். ஆனா இதில் யோசிச்சு முடிவெடுக்க வேண்டியது நீ! நீயும் கொஞ்சம் அவன கவனிச்சுப் பார்த்துட்டு அப்றமா முடிவு சொன்னா போதும். வேண்டாம்னா வேண்டாம்னு சொல்லிடு, அதையும் நாங்க முழுசா ஏத்துப்போம். உனக்கு அவன பிடிக்கணும்னு எந்த கட்டாயமும் இல்ல.
அவன்ட்ட இதைப் பத்தி நாங்க இன்னும் பேசல, நீ என்ன சொல்றன்றத வச்சுதான் அவன்ட்ட பேசவா வேண்டாமான்னு முடிவு செய்யணும்னு யோசிச்சோம்.
ஆக்சுவலி போன வருஷமே அவன்ட்ட கல்யாணத்துக்கு பொண்ணு பார்ப்போம்னு பேசி, அவனும் சம்மதம் சொல்லி, அவனுக்கு அலையன்ஸ் பார்க்க ஆரம்பிச்சுட்டோம். எந்த பொண்ணைப் பத்தி சொன்னாலும் ஆர்வமா கேட்டுட்டு, ரெண்டு மூனு நாள் அந்தப் பொண்ணைப் பத்தி வெளிய விசாரிச்சுட்டு வந்து, இன்னும் கொஞ்சம் மெச்சூர்டான்ன பொண்ணா இருந்தா நல்லா இருக்கும்பான்.
உங்கண்ணா பொறுத்து பொறுத்து பார்த்துட்டு அது என்னடா நீ சொல்ற மெச்சூரிட்டின்னு விசாரிச்சா “என் கடந்த காலத்தை என் வாழ்க்கையோட முடிஞ்சு போன ஒரு பகுதி, ஆனா ஸ்டில் அது ஒரு பகுதின்னு புரிஞ்சிக்கிற அளவு பக்குவமான பொண்ணு வேணும்றான்.
இது என்ன லாஜிக்னு கேட்டா, அப்பதான் அந்த பொண்ணால என் கடந்த காலத்தை ஈசியா தாண்டி வரவும் முடியும், அதே நேரம் என் கடந்த காலத்தால எதாவது பிரச்சனை எதிர்காலத்தில் வந்தா அதுக்காக அப்செட் ஆகாம, என்ட்ட வந்து சண்டை பிடிக்காம, சரி நாம சேர்ந்து இதை ஹேண்டில் செய்வோம்னு யோசிக்கவும் முடியும்னு சொல்றான்.
அப்பத்தான் எங்களுக்கு ஒன்னு ஞாபகம் வந்துச்சு. அவன் அரெஸ்ட் ஆன நாளில் உன்னைப் பத்தி பேசுறப்ப இதையேத்தான் சொன்னான். என் கடந்த காலத்தை என் வாழ்க்கையோட முடிஞ்சு போன ஒரு பகுதி, ஆனா ஸ்டில் அது ஒரு பகுதின்னு புரிஞ்சிகிட்டு பேசினா வேணின்னு.
இதனால நான் அவன் உன்னையவே இன்னும் நினச்சுகிட்டு இருக்கிறான்னு எல்லாம் சொல்ல வரல, அப்படின்னா வெளிய பொண்ணுல்லாம் பார்க்கச் சொல்லியிருக்கவும் மாட்டான்.
அவனே அறியாம அவன் உன்னைப் போல க்வாலிட்டீஸ் உள்ள பொண்ண தேடுறான்றது எங்களோட புரிதல்.
அப்பதான் எங்களுக்கு இன்னொன்னு கவனத்தில் வந்தது.