உச்சந்தலையில் சில முத்தங்கள் தந்த வண்ணம் இதுவரைக்கும் தாயாய் தழுவி இருந்தவன்
“பெரியத்த அப்டி சொன்ன பிறகு பிஜுவையாவது நான் தேடி இருக்கலாம்” என்றான்….
இவளைப் போல்தான் இவளுடையவனும்…. இவள் அனுபவித்த வலியை சுமந்து தீர்த்திருக்கிறான் என புரிகின்றது அன்றிலுக்கு…..
அவன் முன் நெற்றி முடி ஒதுக்கி…..சற்றாய் எவ்வி….அவன் நெற்றியில் இதழ் ஒற்றினாள்.
“இப்டி அழுதுட்டியே” என்றான்…. தவிப்பு தெரிந்த அவன் கண்களில் இதழ் பதித்தவள்….கை நீட்டி அடுத்து அவன் முடியை கலைத்தாள்.
அடுத்து அவன் எதோ சொல்ல வர இப்போது அவள் இதழ் கண்ட களம் அவனது இடக் கன்னம்.
வந்து உதித்த அவன் புன்னகையில் சூரிய ப்ரகாசம்.
இறுகியது அவன் பிடி….
“இது தெரிஞ்சா…..இந்த ட்ரீட்மென்ட முன்னமே செய்துறுக்கலாம் போலயே…..” குறும்பிற்கு மொத்தமாய் குடியேறி இருந்தான் அவன்.
“அப்போலாம் நான் போடுறது செம்ம ஷார்ப் ஹீல்ஸாக்கும்….” சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள் இவள்…. கொஞ்சம் ஓவரா போச்சோ…
“கல்யாணம் முடியவும் சொல்ற டயலாக்காடி இது….”
“கல்யாணத்துக்கு முன்ன செய்ற வேலையாமா அது?…..பைதவே உலகத்திலயே ஹஸ்பண்டை அடிக்கிற வைஃப்ஸ் இருக்கிற நாட்டில் இந்தியா செகண்ட் ப்ளேஸ்…”
“அடிப்பாவி….உலகத்திலயே வைஃபை அடிக்கிற ஆம்பிளைங்க அதிகமா இருக்ற நாடுடி இது….. பின்ன வாங்குற வைஃப் கொடுக்க மாட்டாங்களா…. ஆனா இதுல நானும் நீயும் ஏன் வர்றோம்….?”
“ச்ச்….ச்ச்… ச்ச்…..சும்மா” இதழ் குவித்து விளையாட்டாய் இவள் சொல்ல…. அடுத்து என்ன செய்ய தோணுமாம் அவனுக்கு…?
“ரெஸ்ட் மட்டும்தான் எடுக்க சொன்னாங்க…..” இதழ் நோக்கி இறங்கியவனை விலகி அறையிலிருந்து வெளியே ஓடினாள் அவள்.
அந்த ‘ப’ வடிவ பெரிய வீட்டில் ஒரு பகுதி மாடி மட்டுமே அறைகள் கொண்டது….. மற்றதெல்லாம் திறந்தவெளி மொட்டை மாடிதான்.
இது மழைக்காலம் என்பதால் இந்த நேரமும் வெயிலின்றி சில் காற்றோடு ஒரு ரம்யமான சூழல் அங்கு நிலவ….. அறைக்குள் இருந்து மொட்டை மாடிக்கு வந்தவள் அங்கேயே நின்று கொண்டாள்.
அவனைவிட்டு போவது போல் காட்டிக் கொண்டாலும் போக மனம் விடுமா என்ன?
இவள் எதிர் பார்த்தது போல் அடுத்த நிமிடம் அங்கு வந்து நின்றான் அவளது நாயகனும்…
“ஹேய் அல்வா பொண்ணு…” அவன் என்னமோ சொல்ல தொடங்க…..
அதே நேரம் “ இங்க என்ன செய்ற….?” என கேட்டது பெரியப்பாவின் குரல்….
அன்றில் மொட்டை மாடி கைபிடிசுவர் தாண்டி வெளியே பார்த்தாள்.
“ அதான் அங்க அவ்ளவு இலை இருக்குதே….இதை ஏன் வெட்டிட்டு இருக்க…?” வீட்டிற்கு ஒரு பக்கமாக நின்றிருந்த வாழை மரத்திலிருந்து இலையை வெட்டிக் கொண்டிருந்த பெரியம்மாவும் அவரிடம் விசாரிக்கும் பெரியப்பாவும் இவள் பார்வையில் படுகின்றனர்…
“இது…. நம்ம அனிக்கும் மாப்ளைக்கும்….” என தன் வேலையில் மும்முரமாக இருந்தபடியே பெரியம்மா பதில் சொன்னார்.
“இது எங்க அம்மா காலத்துல இருந்து வாழையடி வாழையா வர்ற மரம்…. இதுல அம்முவையும் மாப்ளையையும் சாப்ட சொல்லனும்னு எனக்கு ஆசை….” காரணமும் தெரிவித்தார்.
“அது சரி…. அதுக்கு ஏன் சிரிச்சுகிட்டே இலைய வெட்டுற…?”
“அது அனி மாப்ள சொன்னது நியாபகம் வந்துச்சு….”
“தினமும் நல்லா அவர்ட்ட அரட்டை என்ன…? சரி கதைய சொல்லு…” கேட்டபடி பக்கத்திலிருந்த கல்லில் உட்கார்ந்தார் பெரியப்பா..
இது எப்ப…? அன்றில் ஆச்சர்யமாய் திரும்பி தன்னவனை ஒரு பார்வை பார்த்தாள்.
“நீ எங்க அம்மாட்ட பேசுறல்ல அப்போ….” என இவள் கேட்காத கேள்விக்கு பதில் கொடுத்தான் இவள் பின்னால் வந்து நின்றிருந்த இவளவன்…